கேள்விகள் கற்றலுக்கான திறவுகோல்” என்ற நூல் கற்றலின் அடிப்படை உண்மையை நினைவூட்டும் வல்லமை கொண்டது. கல்வி என்பது வெறும் அறிவைப் பெறுதல் மட்டுமல்ல, அதை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் முயற்சியுமாகும். அந்த முயற்சிக்கு உயிரூட்டுவது கேள்விகள். கேள்வி எழுப்பும் திறன் தான் அறிவைத் தேடும் கதவைத் திறக்கிறது.

திருக்குறளில் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை”   என்று கூறப்படுவது போல, கேள்வி எழுப்புதல், பதிலைத் தேடுதல் என்பவையே உண்மையான செல்வமாகும். இந்நூல் அந்தச் செல்வத்தை அடைய வழிகாட்டுகிறது.

பதின்மூன்று கட்டுரைகளைக் கொண்ட இந்நூல், சிந்தனையைத் தூண்டும் எளிய நடையில் அமைந்துள்ளது. அறிவியலைப் புரிந்துகொள்ளும் புது பார்வையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வின் கேள்விகளையும் ஆராய்ச்சி உணர்வுடன் அணுகச் செய்கிறது. “அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல்”, “மருத்துவத்தில் முப்பரிமாண அச்சடிக்கும் தொழில்நுட்பம்”, “மறுபயன்பாட்டு ஏவு வாகனம்”, “நகரும் மின் நிலையம்” போன்ற கட்டுரைகள் அறிவியல் உலகின் சமீபத்திய முன்னேற்றங்களை எடுத்துரைக்கின்றன. அதேவேளை, “குட்டி பையனும் குண்டு மனிதனும்”, “பூமி சுழற்சி தினம்”, “எழுதுவதின் மகிழ்வு” போன்ற தலைப்புகள் அறிவியலை எளிய கதைகளோடு இணைத்து வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகப் பரிமாறுகின்றன.

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதுபோல, ஒரு கேள்வி எண்ணற்ற சிந்தனைகளுக்குத் தூண்டுதலாகிறது. இந்த நூல் அத்தகைய கேள்விகளை எழுப்பி, அவற்றின் மூலம் அறிவைப் பெறும் இனிய பயணத்தை வாசகர்களுக்கு அளிக்கிறது.

கேள்விகள் கற்றலுக்கான திறவுகோல்” என்பது மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், பொதுவாக அறிவை விரும்பும் அனைவருக்கும் ஓர் அரிய வழிகாட்டி. ஒருமுறை படித்து வைக்க வேண்டியது அல்ல; மீண்டும் மீண்டும் வாசித்து சிந்திக்க வைக்கும், அறிவின் வெளிச்சம் பாய்ச்சும் ஓர் அறிவியல் நூல்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “கேள்விகள் கற்றலுக்கான திறவுகோல்”

Your email address will not be published. Required fields are marked *